﻿எண்ணாகமம்.
1.
இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்த இரண்டாம் வருடம் இரண்டாம் மாதம் முதலாம் நாள், சீனாய் பாலைவனத்தில், சபைக் கூடாரத்தில் யெகோவா மோசேயுடன் பேசினார். அவர் சொன்னதாவது: 
“நீ இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும், வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடவேண்டும். ஒவ்வொருவரையும் பெயர் பெயராகப் பதிவு செய்யவேண்டும். 
நீயும், ஆரோனும் படையில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லா இஸ்ரயேல் மனிதர்களையும், அவர்களுடைய பிரிவுகளின்படி கணக்கிடுங்கள். 
இதற்காக ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும், குடும்பத்தின் தலைவன் உனக்கு உதவிசெய்ய வேண்டும். 
“உனக்கு உதவியாய் இருக்கவேண்டியவர்களின் பெயர்களாவன: “ரூபன் கோத்திரத்திலிருந்து சேதேயூரின் மகன் எலிசூர்; 
சிமியோன் கோத்திரத்திலிருந்து சூரிஷதாயின் மகன் செலூமியேல், 
யூதா கோத்திரத்திலிருந்து அம்மினதாபின் மகன் நகசோன், 
இசக்கார் கோத்திரத்திலிருந்து சூவாரின் மகன் நெதனெயேல், 
செபுலோன் கோத்திரத்திலிருந்து ஏலோனின் மகன் எலியாப், 
யோசேப்பின் மகன்களான எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்து அம்மியூதின் மகன் எலிஷாமா, மனாசே கோத்திரத்திலிருந்து பெதாசூரின் மகன் கமாலியேல், 
பென்யமீன் கோத்திரத்திலிருந்து கீதியோனியின் மகன் அபீதான், 
தாண் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் மகன் அகியேசேர், 
ஆசேர் கோத்திரத்திலிருந்து ஓகிரானின் மகன் பாகியேல், 
காத் கோத்திரத்திலிருந்து தேகுயேலின் மகன் எலியாசாப், 
நப்தலி கோத்திரத்திலிருந்து ஏனானின் மகன் அகீரா.” 
தங்களுடைய முற்பிதாக்களின் கோத்திரங்களின் தலைவர்களாக, இஸ்ரயேல் சமுதாயத்திலிருந்து நியமிக்கப்பட்ட மனிதர்கள் இவர்களே. இஸ்ரயேல் வம்சங்களின் தலைவர்களும் இவர்களே. 
மோசேயும், ஆரோனும் பெயர் கொடுக்கப்பட்ட இம்மனிதரைச் சேர்த்துக்கொண்டார்கள். 
இரண்டாம் மாதம் முதலாம் நாளில், இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும் ஒன்றுகூட்டினார்கள். மக்கள் தங்கள் பரம்பரையைத் தங்கள் வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் குறிப்பிட்டார்கள். இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய மனிதர்கள் ஒவ்வொருவரும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். 
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தார்கள். இப்படியாக சீனாய் பாலைவனத்தில் அவன் அவர்களைக் கணக்கிட்டான். 
இஸ்ரயேலின் முதற்பேறான ரூபன் சந்ததியிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய, இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். 
ரூபன் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 46,500 பேர். 
சிமியோனின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய, இருபது வயதையும் அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். 
சிமியோன் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 59,300 பேர். 
காத்தின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். 
காத் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 45,650 பேர். 
யூதாவின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். 
யூதாவின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 74,600 பேர். 
இசக்கார் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். 
இசக்காரின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 54,400 பேர். 
செபுலோனின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். 
செபுலோனின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 57,400 பேர். 
யோசேப்பின் மகனான எப்பிராயீமின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். 
எப்பிராயீமின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 40,500 பேர். 
யோசேப்பின் மகனான மனாசேயின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். 
மனாசேயின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 32,200 பேர். 
பென்யமீனின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். 
பென்யமீனின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 35,400 பேர். 
தாணின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும், பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். 
தாணின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 62,700 பேர். 
ஆசேரின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும், உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். 
ஆசேரின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 41,500 பேர். 
நப்தலியின் சந்ததிகளிலிருந்து, இராணுவத்தில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லோரும் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய வம்ச பதிவின்படியும், குடும்ப பதிவின்படியும் பெயர் பெயராகப் பதிவு செய்யப்பட்டார்கள். 
நப்தலியின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 53,400 பேர். 
மோசேயினாலும், ஆரோனாலும், தன்தன் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இஸ்ரயேலரின் பன்னிரண்டு தலைவர்களினாலும் எண்ணப்பட்ட மனிதர்கள் இவர்களே. 
இஸ்ரயேலின் இராணுவத்தில் பணிசெய்யக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய இஸ்ரயேலர் எல்லோரும் அவர்களுடைய குடும்பங்களின்படியே எண்ணப்பட்டார்கள். 
மொத்த எண்ணிக்கை 6,03,550 பேர். 
ஆனால், மற்றவர்களோடு லேவி கோத்திரத்தின் குடும்பங்கள் கணக்கிடப்படவில்லை. 
யெகோவா மோசேயிடம் சொல்லியிருந்ததாவது: 
“நீ லேவி கோத்திரத்தைக் கணக்கிடவோ, அவர்களை மற்ற இஸ்ரயேலருடன் மக்கள் தொகை கணக்கெடுக்கவோ வேண்டாம். 
ஆனால் நீ லேவியரை சாட்சிபகரும் இறைசமுகக் கூடாரத்திற்கும், அதன் எல்லா பணிப்பொருட்களுக்கும், அதற்குரிய எல்லாவற்றிற்கும்மேல் பொறுப்பாக நியமிக்கவேண்டும். இறைசமுகக் கூடாரத்தையும், அதன் பணிமுட்டுகளையும் அவர்களே சுமக்கவேண்டும். அவர்களே அதைப் பராமரித்து, அதைச் சுற்றிலும் முகாமிடவேண்டும். 
எப்பொழுதாவது இறைசமுகக் கூடாரத்தை நகர்த்தவேண்டுமானால், லேவியரே அதைக் கழற்றவேண்டும். இறைசமுகக் கூடாரத்தை அமைக்கவேண்டுமென்றாலும் அதை லேவியரே செய்யவேண்டும். அதற்கு அருகில் செல்லும் வேறு எவனும் கொல்லப்படவேண்டும். 
இஸ்ரயேலர் தங்கள் பிரிவுகளின்படியே கூடாரங்களை அமைக்கவேண்டும். ஒவ்வொருவனும் தன் சொந்தக் கூடாரத்தில் தன் சொந்தக் கொடியின்கீழ் இருக்கவேண்டும். 
ஆனாலும், இஸ்ரயேல் சமுதாயத்தின்மேல் கோபம் வராதபடிக்கு லேவியர்கள் உடன்படிக்கைக் கூடாரத்தைச் சுற்றி தங்கள் முகாமிடவேண்டும். உடன்படிக்கைக் கூடாரத்தின் பராமரிப்புக்கு லேவியரே பொறுப்பாயிருக்க வேண்டும்.” 
யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் இவற்றையெல்லாம் செய்தார்கள். 
